கவலைக்குரிய ஓமிக்ரோன் புதிய கொரோனா வைரஸ் திரிபு பரவலை அடுத்து இங்கிலாந்தில் கட்டுப்பாடுகள் மீண்டும் கடுமையாக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு அங்கமாக அடுத்த வாரம் முதல் கடைகள் மற்றும் பொது போக்குவரத்துக்களின்போது முக கவசம் அணிவது கட்டாயம் என பிரதமர் போரிஸ் ஜோன்சன் கூறியுள்ளார்.
அத்துடன், பிரித்தானியாவுக்குள் நுழையும் அனைவருக்கும் பி.சி.ஆா். பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். மேலும் புதிய திரிவு வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்புடைய அனைவரும் முழுமையாகத் தடுப்பூசி போட்டிருந்தாலும் தம்மை சுயமாகத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் பிரதமர் போரிஸ் ஜோன்சன் அறிவுறுத்தியுள்ளார்.
எனினும் 2020 ஐ விட கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் ஓரளவுக்கு இம்முறை இயல்பாக இருக்கும் எனவும் அவா் தெரிவித்தார். தற்போதைய கட்டுப்பாடுகள் முன்னெச்சரிக்கையுடன் எடுக்கப்பட்ட தற்காலிக நடவடிக்கை எனவும் அவா் தெரிவித்தார்.
ப்ரென்ட்வுட், எசெக்ஸ் மற்றும் நாட்டிங்ஹாம் ஆகிய இடங்களில் ஓமிக்ரோன் புதிய திரிபு தொற்று நோயாளர்கள் கண்டறியப்பட்டதை உறுதிப்படுத்திய பின்னர் செய்தியாளர்களை நேற்று சந்தித்துப் பேசிய பிரதமர் ஜோன்சன் புதிய கட்டுப்பாடுகளை அறிவித்தார்.
புதிய திரிபு தொற்றுக்குள்ளாகி அடையாளம் காணப்பட்டவர்கள் தென்னாப்பிரிக்காவுக்கு பயணம் செய்தவர்கள் மற்றும் அந்நாட்டுக்கு பயணம் செய்தவர்களுடன் தொடர்புடையவா்கள் என பிரிட்டன் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தென்னாபிரிக்காவில் கண்டறியப்பட்ட B.1.1.529 கொவிட் 19 வைரஸின் புதிய திரிபுக்கு உலக சுகாதார அமைப்பு “ஓமிக்ரோன்” என பெயரிட்டுள்ளது.
நோய் எதிர்ப்பு சக்தியை முழுயைாக எதிர்க்கும் என தெரிவிக்கப்படும் இந்த புதிய திரிபு வைரஸ் வேகமாக பரவும் தன்மை கொண்டதாக கூறப்படுகிறது.
இந்த வைரஸ் பரவலை அடுத்து முன்னெச்சரிக்கையாக தென்ஆப்பிரிக்க பிராந்தியத்தில் உள்ள 7 நாடுகளில் இருந்து வரும் விமானங்களுக்கு ஐரோப்பிய நாடுகளான ஜேர்மனி மற்றும் இத்தாலி உள்ளிட்ட சில நாடுகள் தடை விதித்துள்ளன.
முன்னதாக இங்கிலாந்தும் தென்ஆபிரிக்க பிராந்திய நாடுகளுக்கு பயணத்தடையை அறிவித்தது.
ஐரோப்பாவை தொடர்ந்து தென்ஆபிரிக்கா, போட்ஸ்வானா, எஸ்வாத்தினி, லெசோத்தோ, மொசாம்பிக், நமீபியா மற்றும் ஜிம்பாப்வே ஆகிய 7 நாடுகளின் விமானங்கள் தரை இறங்குவதற்கு சிங்கப்பூரும் தடை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Category: செய்திகள், புதிது
Tags: இங்கிலாந்து